துரிதமாக வளர்ந்து வரும் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் தொழில் நுட்பப் பிரிவு
உயர்த்தரப் பிரிவில் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் ஆகிய துறைகளுக்கு மேலதிகமாக நவீன வேலை உலகிற்கு மாணவர்களைத் தயார்ப் படுத்தும் நோக்கோடு பொறியியல் தொழில் நுட்பம் உயிர் முறைமைகள் தொழில் நுட்பம் தகவல் தொழில் நுட்பம்( ICT - Other stream ) ஆகிய துறைகளை உருவாக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடு அதிபர் திரு. எஸ். ஆனந்தசிவம் அவர்களின் காலத்தில் இப் பிரிவுகள் அவரால் உருவாக்கப்பட்டது.அவரின் கடின முயற்சியினால் இப்பிரிவுக்கான ஆய்வு கூடம் கிடைக்கப் பெற்றது. இப் பிரிவு உருவாக்கப்பட்டு சிறிது காலத்தில் அவர் இடமாற்றம் பெற்றுச் சென்றார்.
அதன் பின்னர் கடமையேற்ற அதிபர் திரு.கே.ரவிதாஸ் அவர்கள் இப் பிரிவை வளர்ப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சி களை மேற்கொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார். மாணவர்களின் அடைவு மட்டம் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களினால் முன்வைக்கப்படும் ஆலோசனைகளை மிக அவதானமாக செவிமடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.அதிபரின் முயற்சிகளுக்கு பிரதி அதிபராக இருந்த திரு வே. தவராஜா அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
உயர்தரத்தில் நான்கு துறையாக இருந்த பிரிவுகளை ஏழாக அதிகரிப்பதற்கும் அதனை வளர்ப்பதற்கும் என்னுடைய முழு ஒத்துழைப்பையும் அதிபர்களான திரு.எஸ் ஆனந்தசிவம் மற்றும் திரு. கே. ரவிதாஸ் ஆகியோருக்கு வழங்கினேன்.
தொழில் நுட்பப் பிரிவின் ஆரம்பம் முதலே இப் பிரிவின் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள், விவசாயக் கல்லூரிகள், ஏனைய தொழிற் பயிற்சி நிறுவனங்களுக்கு தெரிவாகினர்.
இதேவேளை உயர் தரத்தில் கலை வர்த்தகம் கணிதம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் தகவல் தொழில் நுட்ப்பம் மூன்று பிரதான பாடங்களில் ஒன்றாக கற்பிக்கப் படுகின்றது. கணிதப் பிரிவில் தகவல் தொழில் நுட்பத்தை ஒரு பாடமாக கற்பவர்கள் பிற துறை என்ற வகையில் சிறப்பான பல்கலைக்கழகபாட நெறிகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.
பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் இருந்து மாணவன் எஸ். பிரனித் மாவட்டநிலை ஐந்தினைப் பெற்று பல்கலைக் கழகம் தெரிவாகியதுடன் உயிர் முறைமைகள் தொழில் நுட்பப்பிரிவில் இருந்து மாணவி எம். அனுசிகா மற்றும் மாணவன் உ. நசிகேதன் ஆகியோர் மாவட்ட மட்டத்தில் முறையே ஐந்து, பன்னிரெண்டாம் நிலைகளைப் பெற்று தெரிவாகினர்.
2022 ம் ஆண்டு உயர் தரப் பரீட்சைப் பெறுபெறுகளின்படி தொழில் நுட்பப் பிரிவில் இருந்து பதினொரு (11) பேர் பல்கலைக்கழகம் தெரிவாகினர். இப் பிரிவில் உயிர் முறைமைகள் தொழில் நுட்பப் பிரிவில் 100% சித்தியும் பொறியியல் தொழில் நுட்பப் பிரிவில் 90% சித்தியும் பதிவாகி உள்ளது.
இத் துறையை வளர்ப்பதில் பழைய மாணவர்களும் பெற்றோரும் நலன் விரும்பிகளும் கூடிய பங்களிப்பினை வழங்க வேண்டும். அத்துடன் தற்போதைய பகுதித் தலைவரும் பிரதி அதிபரும் ஆசிரியர்களும் தூர நோக்குடன் செயற்படுவது அவசியம்.
இப் பிரிவு மென்மேலும் வளர எல்லாம் வல்ல மங்களநாதர் அருள் புரிவாராக.
நடராசா உமாசங்கர்
பழைய மாணவர்
முன்னாள் பகுதித் தலைவர்/ ஆசிரியர் ICT
தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி
திருகோணமலை.
11.11.2023
Download As PDF