உவர்மலை விவேகானந்தா எனும் காலத்தை வென்றெழுந்த அறிவாலயம்.
இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கும் திருகோணமலை நகரின் வயதில் குறைந்த பாடசாலை ஒன்று நாற்பத்தி மூன்று வருடங்களில் அபாரமான வரலாற்று சாதனைகளை படைத்து காலத்தை வென்றெழுந்த அறிவாலயமாகத் திகழ்கின்றது. 1978 மாசித் திங்கள் 10ஆம் நாள் குறைந்த வசதிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாடசாலை மிக மிகக் குறுகிய காலத்தினுள் மாபெரும் கல்விக் கூடமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
திருகோணமலை நகரில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம்,உயிர் முறைமைகள் தொழில்நுட்பம்,பொறியியல் தொழில்நுட்பம், வேறு துறை - தகவல் தொழில்நுட்பம் ஆகிய 7 பிரதான துறைகளை உயர்தரப் பிரிவில் கொண்டுள்ள ஒரே ஒரு பாடசாலை பாடசாலையாகத் திகழ்கின்றது. 2014ஆம் ஆண்டில் உயர்தரத்தில் தகவல் தொழில்நுட்பமும் 2017ம் ஆண்டில் தொழில்நுட்பப் பிரிவும் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கல்வி பொது சாதாரண தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை போன்றவற்றில் மாவட்ட மட்டத்தில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் சாதனை படைத்துள்ளது உவர்மலை விவேகானந்தா கல்லூரி. அத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் அகில இலங்கை ரீதியில் சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.
பாடசாலையின் வளர்ச்சியில் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய அதிபர் ஆசிரியர்கள் ஆற்றிய மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் அபாரமானவை.
பாடசாலையில் முதலாவது அதிபராக திரு. வ.தங்கவேல் அவர்களும் தொடர்ந்து திரு கே பாலச்சந்திர ஐயர், திரு எம் மகாததேவன், திரு சி. நவரத்தினம், திரு ந விஜேந்திரன்(பதில் அதிபர் -சில மாதங்கள் )திரு ஆ. செல்வநாயகம் திரு எஸ். மதியழகன் திரு எஸ். ஆனந்தசிவம் திரு வே. தவராஜா (பதில் அதிபர் - சில மாதங்கள் )ஆகியோர் அதிபர்களா கடமையாற்றி உள்ளனர். தற்போதயை அதிபராக திரு கே.ரவிதாஸ் அவர்கள் கடமையாற்றிக்கொண்டு இருக்கின்றார்.
கல்லூரியை மென்மேலும் வளர்க்க வேண்டும் என்ற அவாவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் தற்போதையை அதிபரின் முயற்சிகள் சிறப்பானவை.
கடந்த காலங்களில் நவோதயா மற்றும் இசுறு போன்ற திட்டங்களில் உள்வாங்கப்பட்ட இந்தப் பாடசாலை மாகாணத்தின் முதன் நிலைப் பாடசாலைகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் அதேவேளை தேசிய பாடசாலையாக உள்ளீர்ப்புச் செய்யப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.
குறுகிய காலத்தில் விரைவாக வளர்ச்சியடைந்த இப்பாடசாலை சந்தித்த சவால்களுக்கு அளவேயில்லை எனக்கூறலாம்.
உவர்மலை விவேகானந்தாவின் மைந்தர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பார் போற்றும் வண்ணம் சிறப்பான இடங்களில் பணிபுரிவது மகிழ்ச்சியைத் தருகின்றது. கல்லூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
நடராசா உமாசங்கர்
பழைய மாணவர்
தி /உவர்மலை விவேகானந்தா கல்லூரி
திருக்கோணமலை.
10.06.2021