* கல்வி அமைச்சின் செயலாளர் தியாகலிங்கம் பெருமிதம் ஜப்பானியர், மேலை நாட்டினரின் நேரமுகாமைத்துவம் மற்றும் சிறப்பான செயற்பாடுகளை உள்வாங்கிக் கொண்டு தங்களுக்குரிய பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் பண்பாடுகளை விட்டுக்கொடுக்காது செயற்படுவதற்கு உதாரணமாக திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா கல்லூரி விளங்குவதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இ.தியாகலிங்கம் தெரிவித்தார்.
கல்லூரியின் முப்பது வருட நிறைவை ஒட்டி நடைபெற்ற கல்லூரி தினத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வு கடந்த புதன்கிழமை மாலை கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது. செயலர் தியாகலிங்கம் சிறப்பு அதிதியான திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் கு.திலகரத்தினம் கல்லூரி அதிபர் எஸ்.நவரத்தினம், கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் ம.தர்மராசா ஆகியோர் கல்லூரியின் பாண்ட் வாத்திய சகிதம் அழைத்துவரப்பட்டனர். செயலர் தியாகலிங்கம் தேசியக் கொடியையும் அதிபர் நவரத்தினம் கல்லூரிக் கொடியையும் ஏற்றினர்.
30 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமான உவர்மலை விவேகானந்தா கல்லூரி இக்குறுகிய காலத்தில் சகல துறைகளிலும் வளர்ச்சியின் உச்சத்தை எட்டியுள்ளதற்குக் காரணம் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோரின் அயராத அர்ப்பணிப்பாகும் என்றும் செயலர் தியாகலிங்கம் கூறினார்.
கல்லூரியின் தற்போதைய அதிபர் நவரத்தினத்தின் சிறப்பான முகாமைத்துவம் அதன் உயர்நிலைக்கு முழுக்காரணமாகிறது. அதிபர் நவரத்தினம் அதிபர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக கல்லூரியை புதிய பார்வையுடன் நேரமுகாமைத்துவத்துக்கு முதலிடம் கொடுத்துக் கொண்டு செல்வதைப் பாராட்ட வேண்டும். கல்லூரியின் வளர்ச்சிபற்றி கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு விடயத்தையும் திட்டமிட்டு செயலாற்றும் திறமையை அதிபரிடம் காண்கின்றோம்.
கல்வி மட்டுமல்ல, திட்டமிடல், நேரம் தவறாமை, விழுமியங்களை உள்ளடக்கிய புதிய இளம் சமுதாயம் ஒன்றை உருவாக்கும் ஸ்தாபனமாக விவேகானந்தா கல்லூரி விளங்குவதாகவும் செயலர் தியாகலிங்கம் குறிப்பிட்டார்.
திருமலை வலயக் கல்விப் பணிப்பாளர் கு.திலகரத்தினம் பேசும்போது, வடக்கு, கிழக்கு மாகாணத்திலேயே ஒரு முன்னணி கல்வி நிறுவனமாக உவர்மலை விவேகானந்தா கல்லூரி விளங்குவதாகவும் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு தாரமும் கல்வியும் உறுதுணையாக அமைகின்றன. விவேகானந்தா கல்லூரியின் ஆசிரியர் சமூகம் குருவின் ஸ்தானத்தை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்லூரி அதிபர் எஸ்.நவரத்தினம் தலைமையுரை நிகழ்த்தினார். கல்லூரி தினத்தை கொண்டாடுவதற்கு சிலிங்கோ இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜ்குமார் ரங்கநாதன் ஐம்பதினாயிரம் ரூபா நன்கொடையாக வழங்கினார். அதற்கு கல்லூரி சார்பில் அதிபர் நன்றி தெரிவித்தார். கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்து, இன்னும் பங்களிப்பை நல்கி வரும் அனைவருக்கும் அதிபர் நவரத்தினம் நன்றி கூறினார்.
2008 ஆம் ஆண்டுக்கான மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை அதிதிகள் சூட்டினர். கல்லூரி தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசுகளை அதிதிகள் கையளித்தனர்.
கல்லூரியிலிருந்து 2007 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப்புலமைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 53 மாணவர்களுக்கு அதிதிகள் பதக்கங்களை அணிவித்துக் கௌரவித்தனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
1 comment:
Hi all students of orr's hill vivekananda college, happy new year to all.
inthu
student 10D English medium
Post a Comment